விராட் கோலியின் கேட்ச்சினை மிட்செல் மார்ஷ் தவறவிட்டது ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணமில்லை என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (அக்டோபர் 8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து நன்றாக விளையாடியது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். 110 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை சாய்த்தனர். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: இந்திய சுழற்பந்துவீச்சில் தடுமாறி விட்டோம்: ஸ்டீவ் ஸ்மித்
இதனையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான சூழல் உருவானது. விராட் கோலி 12 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கையில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மிட்செல் மார்ஷ் தவறவிட்டார். அதன்பின், விராட் - ராகுல் ஜோடி வலுவான கூட்டணி அமைத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இந்த நிலையில், விராட் கோலியின் கேட்ச்சினை மிட்செல் மார்ஷ் தவறவிட்டது ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணமில்லை என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலியின் கேட்ச்சினை தவறவிட்டது ஆஸ்திரேலியாவின் தோல்வியில் மிகப் பெரிய பங்களித்ததாக நான் நினைக்கவில்லை. அலெக்ஸ் கேரியும் கேட்ச்சை பிடித்திருக்க முடியும் என நான் நினைக்கவில்லை. அது மிட்செல் மார்ஷுக்கு வந்த கேட்ச். அலெக்ஸ் கேரியும் கேட்ச் பிடிக்க ஓடி வந்ததால், மிட்செல் மார்ஷ் கேட்ச் பிடிப்பதை தவற விட்டிருக்கலாம். ஆமாம், மிட்செல் மார்ஷ் கேட்ச்சினை தவறவிட்டு விட்டார். ஃபீல்டிங்கின்போது இதுபோன்ற விஷயங்கள் இயல்புதான். ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த போட்டிகளை நோக்கி நகரும். இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். குல்தீப் யாதவ் கடந்த ஓராண்டாக மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார் என்றார்.