இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பையில் இன்றையப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இந்த இணை வங்கதேசத்துக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. வங்கதேசம் 93 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. தன்சித் ஹாசன் 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் குவிப்போம்: பாட் கம்மின்ஸ்
அதன்பின் களமிறங்கியவர்களில் நஜ்முல் ஹொசைன் (8 ரன்கள்), மெஹிதி ஹாசன் மிராஸ் (3 ரன்கள்), தௌகித் ஹிரிடாய் (16 ரன்கள்), முஸ்பிகூர் ரஹீம் (38 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். லிட்டன் தாஸ் 82 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மஹ்முதுல்லா 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது.
இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷர்துல் தாக்குர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: 'சொல்லமுடியாத கொடூரமான பயங்கரவாதச் செயல்' - ரிஷி சுனக்
257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.