உலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா சஃபீக் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். இமாம் உல் ஹக் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், அப்துல்லா சஃபீக் மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய அப்துல்லா சஃபீக் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கியவர்களில் முகமது ரிஸ்வான் (8 ரன்கள்), சௌத் ஷகீல் (25 ரன்கள்), ஷதாப் கான் (40 ரன்கள்), இஃப்திகார் அகமது (40 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் பாபர் அசாம் 92 பந்துகளில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹ்மனுல்லா 53 பந்துகளில் 65 ரன்களும், இப்ராகிம் ஷட்ரான் 113 பந்துகளில் 87 ரன்களும் எடுத்து அணிக்கு வலுசேர்த்தனர். வலுவான தொடக்கம் ஆப்கானிஸ்தான் அணிக்கு பலம் சேர்த்த நிலையில் ஷாகின் அப்ரிடி பந்தில் கேட்ச் கொடுத்து ரஹ்மதுல்லா ஆட்டமிழந்தார். ஹசன் அலி பந்தில் முகமது ரிஸ்வானுக்கு கேட்ச் கொடுத்து இப்ராகிம் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மத்துல்லா ஷாகிடி ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை இலாவகமாக ஆடியது. வலிமையான தொடர்ந்த இந்த இணை 49வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஹ்மத் ஷா 77 ரன்களுடனும், ஹஸ்மத்துல்லா ஷாகிடி 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.