ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் ஷுப்மன் கில் முதலிடத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.
ஐசிசி தரப்பில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று (அக்டோபர் 25) வெளியிட்டது. அந்த தரவரிசையில் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் ஷுப்மன் கில் 823 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசையில் 829 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். பாபர் அசாமைக் காட்டிலும் ஷுப்மன் கில் வெறும் 6 புள்ளிகளே பின் தங்கியுள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் ஷுப்மன் கில் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவார்.
இதையும் படிக்க: 156 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!
இந்த ஐசிசி ஒருநாள் தரவரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தில் உள்ளார். மற்றொரு தென்னாப்பிரிக்க வீரரான ஹென்ரிச் க்ளாசன் 4 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். இந்தத் தரவரிசையில் டேவிட் வார்னர் 5-வது இடத்திலும், விராட் கோலி 6-வது இடத்திலும் உள்ளனர். அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் 7-வது இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா, ராஸி வாண்டர் துசென் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 8,9, மற்றும் 10-வது இடங்களில் உள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் அண்மையில் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.