உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக் கோப்பையில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மலன் களமிறங்கினர். இந்த இணை சீரான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், டேவிட் மலன் 28 ரன்களிலும், பேர்ஸ்டோ 30 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களில் பென் ஸ்டோக்ஸைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஜோ ரூட் (3 ரன்கள்), ஜோஸ் பட்லர் (8 ரன்கள்), லியம் லிவிங்ஸ்டன் ( 1 ரன்), மொயின் அலி (15 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 33.2 ஓவர்களின் முடிவில் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதனை!
இலங்கை தரப்பில் லகிரு குமாரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளையும், மஹீசா தீக்ஷனா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.