உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர்கள் இருவரும் இடம்பெற்றிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹால் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரையும் எடுத்திருக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்வதற்கான 15 பேர் அடங்கிய இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹால் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரையும் எடுத்திருக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருவர் இடம்பெறாததாக நான் நினைக்கிறேன். யுஸ்வேந்திர சஹால் மற்றும் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும். புதிய பந்தில் இடதுகை பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு மிகுந்த பலனளிப்பவராக இருப்பார். வலதுகை பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்படமாட்டார் எனக் கூறவில்லை. இடதுகை பந்துவீச்சாளரால் விக்கெட் எடுப்பதற்கான கோணத்தை எளிதில் கொண்டுவர முடியும். அதனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய அணியால் இரண்டு விக்கெட்டுகள் எடுக்க முடிந்தால் அது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும்.
ஷகின் அஃப்ரிடி மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆட்டத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றபோது மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சு அந்த அணிக்கு மிகப் பெரிய தாக்கத்தை கொடுத்தது. சஹால் ஆட்டத்தை வென்று கொடுக்கக் கூடிய திறன் உடையவர். மற்ற ஸ்பின்னர்களைக் காட்டிலும் அதிக விக்கெட்டுகள் எடுக்கக் கூடியவர். அவர் வேறு ஒரு நாட்டுக்காக விளையாடியிருந்தால், எப்போதும் அணியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருப்பார் என்றார்.