ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக மாறுவதற்கு சூர்யகுமார் யாதவ் அவரது மனநிலையை 50 ஓவர் போட்டிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டுமென தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
டி20 போட்டிகளில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவுக்கு, ஒருநாள் போட்டிகள் சிறப்பானதாக அமையவில்லை. ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி வெறும் 24.33 ஆக உள்ளது. இதுவரை 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது ஸ்டிரைக் ரேட் 101.38 ஆக உள்ளது. ஒருநாள் போட்டிகள் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை என்பதை அவரே தெரிவித்துள்ளார். அண்மையில் உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார்.
இதையும் படிக்க: விராட் கோலிக்கு சில்வர் பேட்டினை பரிசளித்த இலங்கை வீரர்!
இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக மாறுவதற்கு சூர்யகுமார் யாதவ் அவரது மனநிலையை 50 ஓவர் போட்டிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டுமென தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியதாவது: நான் சூர்யகுமார் யாதவின் மிகப் பெரிய ரசிகன் என்பது உங்களுக்கு தெரியும். நான் விளையாடுவது போலவே சூர்யகுமார் யாதவும் ஷாட்கள் விளையாடுகிறார். ஆனால், ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில், அவருக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அவரது மனநிலையை 50 ஓவர் போட்டிகளுக்கு ஏற்றவாறு சிறிது மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் திறன் அவருக்கு உள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இடம்பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உலகக் கோப்பை தொடரில் கிடைத்துள்ள வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன் என்றார்.
உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.