இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 276 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 22) மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: இந்த 7 உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதா?
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், வார்னருடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், வார்னர் 52 ரன்களிலும், ஸ்மித் 41 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய லபுஷேன் (39 ரன்கள்), கேமரூன் கிரீன் (31 ரன்கள்), ஜோஷ் இங்லிஷ் (45 ரன்கள்), ஸ்டொய்னிஸ் (29 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 9 பந்துகளில் அதிரடியாக 21 ரன்கள் குவித்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பும்ரா, அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.