/

இந்த முறை உலகக் கோப்பையுடன் நாடு திரும்புவோம்: பாகிஸ்தான் கேப்டன்

உலகக் கோப்பையுடன் நாடு திரும்புவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :26 செப்டம்பர் 2023, 1:13 pm

DIN

உலகக் கோப்பையுடன் நாடு திரும்புவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5  முதல் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றன. உலகக் கோப்பையின் முதன்மையானப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. உலகக் கோப்பையில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கான நுழைவு இசைவு (விசா) வழங்கப்படவில்லை என பாகிஸ்தான் தரப்பில் ஐசிசியிடம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் வீரர்களுக்கான நுழைவு இசைவு (விசா) நேற்று (செப்டம்பர் 25)  வழங்கப்பட்டது. 

உலகக் கோப்பைத் தொடரில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு வருகை தரும் பாகிஸ்தான் வீரர்களில் முகமது நவாஸ் மற்றும் அஹா சல்மானைத் தவிர மற்ற அனைவருமே இந்தியாவில் முதல் முறையாக விளையாட உள்ளனர். காயம் காரணமாக 2016 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது இந்தியாவுக்கு பாபர் அசாம் வரவில்லை. தற்போதுள்ள பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ஆடுகளங்களில் விளையாடியது கிடையாது. இந்த நிலையில், உலகக் கோப்பையுடன் நாடு திரும்புவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: நாங்கள் இந்திய ஆடுகளங்களில் இதற்கு முன்னதாக விளையாடியதில்லை. இருப்பினும், அதற்காக நாங்கள் அதிக அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை. நாங்கள் இந்திய ஆடுகளங்கள் குறித்து ஆராய்ந்தோம். மற்ற ஆசிய நாடுகளில் உள்ள ஆடுகளங்களைப் போன்றே இந்திய ஆடுகளங்களும் இருக்கும் எனத் தெரிய வந்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு பயணிப்பது மிகுந்த பெருமையாக உள்ளது. நாங்கள் இந்த முறை உலகக் கோப்பையுடன் பாகிஸ்தான் திரும்புவோம் என நம்புகிறோம்.

என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் குறித்து கவலையில்லை. அணியின் வெற்றிக்கு எந்த விதத்தில் உதவ முடியுமோ அந்த விதத்தில் நான் உதவ வேண்டும். எப்போது வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களில்  கலந்துகொள்ள சென்றாலும் அதற்கு முன்னதாக திட்டமிடுவது  எனது வழக்கம். எனக்கு நானே இலக்குகளை நிர்ணயித்து அந்த இலக்குகளை அடைய எனது 100 சதவிகித உழைப்பையும் தருவேன். ஒவ்வொரு உலகக் கோப்பையும் புது விதமான நம்பிக்கையை கொடுப்பதால் இது ஒருவரை ஹீரோவாக மாற்றிக் கொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பு என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.