ஐபிஎல் 2023 போட்டியை இணையத்தில் இலவசமாக ஒளிபரப்பவுள்ளதாக ஜியோ நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சினிமா ஓடிடியில் இலவசமாக ஒளிபரப்பானது. இதேபோல ஐபிஎல் 2023 போட்டியையும் இலவசமாக ஒளிபரப்ப ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியை 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் எண்ம (டிஜிடல்) ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஏலத்தில் விட்டதன் மூலம் மொத்தமாக ரூ. 48,390.50 கோடி வருவாய் ஈட்டவுள்ளது பிசிசிஐ. தொலைக்காட்சி ஒளிபரப்பில் டிஸ்னி ஸ்டார் நிறுவனமும் டிஜிடல் ஒளிபரப்பில் ரிலையன்ஸின் வையாகாம் நிறுவனமும் உரிமைகளைப் பெற்றுள்ளன. துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான 5 ஆண்டுகளுக்கான டிஜிடல் ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 23,758 கோடிக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் ரூ. 23,575 கோடிக்கும் பெற்றுள்ளன. இதர நாடுகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிடல் உரிமைகளை டைம்ஸ் இண்டர்நெட் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த வருட ஐபிஎல் போட்டி, ஜியோ சினிமா ஓடிடியில் இலவசமாக ஒளிபரப்பானால் அது முதல்முறையாக இருக்கும் என்பதால் அதிகராபூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் வையாகாம் தலைமைச் செயல் அதிகாரி (விளையாட்டு) அனில் ஜெயராஜ் பேசியதாவது:
சந்தா கட்ட முடியாதவர்கள் உள்பட இந்தமுறை யாருக்கும் எவ்வித தடையும் இருக்கக்கூடாது என எண்ணுகிறோம். இணைய வசதி உள்ள அனைவரும் ஐபிஎல் போட்டியைப் பார்த்து சந்தோஷப்படுவதற்கான சூழலை நாங்கள் வழங்கவுள்ளோம். அதனால் 5 நிமிடம் மட்டுமே இலவசமாகப் பார்க்க முடியும் என்கிற கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதில்லை. எந்த வாடிக்கையாளரும் நினைத்தபடி ஐபிஎல் போட்டியைப் பார்க்கலாம். இதற்கு முன்பு வழங்கப்படாத போஜ்பூரி, ஒடியா உள்ளிட்ட 12 மொழிகளில் ஐபிஎல் வர்ணனை இருக்கப் போகிறது. ஐபிஎல் போட்டியைப் பார்க்க விரும்புபவர்கள் தங்களுக்கான மொழியில் பார்த்துக்கொள்ளலாம். மேலும் 4கே ஒளிபரப்புத் தரத்திலும் ஆட்டங்களைப் பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்.