பிரபல கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியாவின் சகோதரர் மும்பை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பிரபல ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா. தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவரது உடன் பிறந்த சகோதராரான குர்ணல் பாண்டியா லக்னௌ அணியில் விளையாடி வருகிறார். இவர்களது சகோதரரான வைபவ் ஹிம்மன்ஸ் பாண்டியா மும்பை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவினர் தெரிவித்த தகவலின்படி 2021இல் பாலிமர் தொடர்பான தொழிலை வைபவ் தொடங்கியுள்ளார். இதில் பாண்டியா சகோதரர்கள் (ஹார்திக், குர்ணல்) தலா 40 சதவிகிதம் முதலீடு செய்ய, மீதி 20 சதவிகிதம் வைபவ் முதலீடு செய்துள்ளார். இதில் வரும் வெற்றி சதவிகிதமும் அதன்படியே இருக்குமென ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை வைபவ் மீறியுள்ளதால் பாண்டியா சகோதரர்களுக்கு வரும் லாப சதவிகிதத்தில் ரூ.4.3 கோடி நஷ்டமடைந்துள்ளது. எனவே, மும்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து வைபவ் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவரை மேலும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை ஆர்சிபி அணியுடன் மும்பை அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. புள்ளிப் பட்டியலில் 8,9வது இடத்தில் இருக்குகும் இருவருக்கும் இந்தப் போட்டி முக்கியமானது.