பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான பிஸ்மா மரூஃப் அனைத்து வடிவிலான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான பிஸ்மா மரூஃப் இதுவரை 276 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 6,262 ரன்கள் குவித்துள்ளார். அதில் 33 அரைசதங்கள் அடங்கும். பாகிஸ்தான் அணிக்காக அவர் 80 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக அவர் வலம் வருகிறார். அவர் ஒருநாள் போட்டிகளில் 3,369 ரன்களும், டி20 போட்டிகளில் 2,983 ரன்களும் குவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற பெருமையும் அவரைச் சேரும்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.