
தனக்கு பிடித்தமான பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவதற்கு ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கிய பங்காற்றினார். 8 போட்டிகளில் விளையாடிய அவர் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரது சிறப்பான செயல்பாடுகள் அவருக்கு டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடர் நாயகன் விருதினை பெற்றுத் தந்தது.
இந்த நிலையில், தனக்கு பிடித்தமான பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.
விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்.எஸ்.தோனி இது குறித்து பேசியதாவது: எனக்கு பிடித்தமான பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிது. ஏனென்றால், அந்த இடத்தில் பும்ரா இருக்கிறார். ஆனால், பிடித்த பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். ஏனெனில், நம்மிடம் நிறைய சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைய இருக்கிறார்கள் எனக் கூறுவதால், சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது பொருள் கிடையாது.
அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து சிந்திக்க அதிக நேரம் இருக்கிறது. வீரர்களை தக்க வைப்பதில் என்ன மாதிரியான விதியினை கொண்டுவரப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதனால், தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் முடிவு நமது கைகளில் இல்லை. புதிய விதிகள் வந்தபிறகு, அணியின் நலன் கருதி எனது முடிவை அறிவிப்பேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.