ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நேரம் கிடைக்கும்போது உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டுமென 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கீர்த்தி ஆஸாத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பெறுவதற்கு ரஞ்சிப் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என்ற விதி வரவேற்கத்தக்கது எனவும், இந்த விதி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி உள்பட அனைத்து வீரர்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் இடம்பெற ரஞ்சிப் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என்ற விதி வரவேற்கத்தக்கது. அனைவரும் ரஞ்சிப் போட்டிகளில் விளையாட வேண்டும். தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கே அனைவரும் கவனம் கொடுத்து வருகின்றனர். ஐபிஎல் போட்டிகள் மகிழ்ச்சியளிக்கும் விதமாக உள்ளது. ஆனால், உண்மையான கிரிக்கெட் என்பது 5 நாள்கள் விளையாடக் கூடிய போட்டிகளே. உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது உங்களது கிரிக்கெட்டை மேலும் வளர்க்கும்.
அதனால் நீங்கள் ரோஹித் சர்மா அல்லது விராட் கோலியாகவே இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் உங்களது மாநிலத்துக்காக விளையாடுங்கள். நீங்கள் ஒரு வீரராக மாறுவதற்கு உங்களுக்கு உதவியது உங்கள் மாநிலமே. உங்கள் மாநிலத்துக்காக விளையாடியதால் நீங்கள் இந்திய அணியில் இடம் பிடித்தீர்கள். இந்த விதியால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மட்டும் தண்டிக்கப்படுவது சரியல்ல. விதி அனைவருக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்றார்.
அண்மையில் வெளியிடப்பட்ட பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.