நியூசிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் சாண்ட்னருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மிட்செல் சாண்ட்னருக்கு இன்று (ஜனவரி 12) காலை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். கரோனா தொற்று உறுதியானதால் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அவர் விளையாடவில்லை.
இது தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: கரோனா தொற்று உறுதியானதால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கலந்து கொள்வதற்கான நியூசிலாந்து அணியுடன் மிட்செல் சாண்ட்னர் ஈடன் பார்க் மைதானத்துக்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 14) ஹாமில்டனில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.