

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் வங்கதேசத்தை இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நேற்று (ஜனவரி 19) முதல் தொடங்கியது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்று வங்கதேசம் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரரான ஆதர்ஷ் சிங் 76 ரன்கள் (6 பவுண்டரிகள்) எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக கேப்டன் உதய் சஹாரன் 64 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்தார். வங்கதேசம் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மரூஃப் மிரிதா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்கியது. இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ஷிகாப் ஜேம்ஸ் 54 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் சௌமி பாண்டே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முஷிர் கான் 2 விக்கெட்டுகளையும், ராஜ் லிம்பானி, அர்ஷின் குல்கர்னி மற்றும் பிரியன்ஷு மோலியா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இந்திய அணி வங்கதேசத்தை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.