பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
38 வயதான தினேஷ் கார்த்திக் தமிழகத்தினைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். இந்திய அணியில் 2004 முதல் விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனியால் இவருக்கான வாய்ப்புகள் பறிபோனதாக சில கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
242 ஐபிஎல் போட்டிகளில் 4516 ரன்கள் எடுத்துள்ளார். ஆர்சிபி அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். 94 ஒருநாள் போட்டிகளில் 2392 ரன்களும், 26 டெஸ்ட் பொட்டிகளில் 1025 ரன்களும் 60 டி20களில் 686 ரன்களும் எடுத்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும் தினேஷ் கார்த்திக் இந்தாண்டு ஐபிஎல்தான் அவரது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்குமெனவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவிக்க உள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லி டேர்டெவில்ஸில் தொடங்கிய தினேஷ் கார்த்தியின் பயணம் 2011இல் பஞ்சாப் அணியில் விளையாடினார். 2 ஆண்டுகள் மும்பையுடன் விளையாடி பின்னர் மீண்டும் தில்லி அணிக்கு 12.5 கோடிக்கு திரும்பினார். 2018இல் கேப்டனாக கொல்கத்தா அணியை ப்ளே ஆஃப்க்கு அழைத்து சென்றார். 2022இல் கேகேஆர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆர்சிபி அணிக்கு 5 கோடி விலைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் தொடரில் 6 அணிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்டராக தினேஷ் கார்த்திக் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் 141 கேட்ச்கள், 36 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
ஆர்சிபி அணிக்காக ஃபினிஷர் ரோலில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், தற்போது வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். சரவ்தேச கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும்போது சரியாக பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் தினேஷ் கார்த்திக் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.