சர்வதேசப் போட்டிகளில் நடுவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல நடுவர் மராய்ஸ் எராஸ்மஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் அவர் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சர்வதேசப் போட்டிகளில் நடுவராக எனது பயணம் சிறப்பானதாக அமைந்தது. உலக அளவில் ஐசிசி நடத்தும் போட்டிகளில் நடுவராக பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. கிரிக்கெட் வீரராக இருந்து அதன்பின் நடுவராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நடுவராக பணியாற்றிய ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியானதாக அமைந்தது என்றார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு நடுவராக தனது பயணத்தைத் தொடங்கிய மராய்ஸ் எராஸ்மஸ் இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் கள நடுவராக செயல்பட்டுள்ளார். பல்வேறு ஐசிசி போட்டிகளில் களநடுவராக செயல்பட்டுள்ளார். நான்கு முறை 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர்களில் (2011, 2015, 2019, 2023) களநடுவராக செயல்பட்டுள்ளார். அதேபோல ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் 7 முறை (2009, 2010, 2012, 2014, 2016, 2021, 2022) கள நடுவராக செயல்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மராய்ஸ் எராஸ்மஸ் நடுவராக செயல்படவுள்ள 380-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.