ஷுப்மன் கில் 3-வது வீரராக களமிறங்குவதை விரும்பவில்லை என அவரது தந்தை லக்விந்தர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் ஷுப்மன் கில் மீதான அழுத்தம் அதிகரித்தது. 12 இன்னிங்ஸ்களாக அவரால் ஒரு அரைசதம் கூட எடுக்க முடியவில்லை. அவரது அதிரடியான ஆட்டத்தை விடுத்து தடுப்பாட்டாத்தை முயற்சி செய்து விக்கெட்டை இழப்பதாகவும் விமர்சனங்கள் வலம் வந்தன. ஆனால், அவர் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட்டில் சதம் விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காமல் 3-வது வீரராக களமிறங்க தொடங்கிய பிறகு அவர் அடித்த மிகப் பெரிய ஸ்கோர் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் அவர் அடித்த சதமே ஆகும். அதன்பின் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பிய அவர் மீண்டும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தொடங்கினார். இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் சதம் விளாசி அசத்தினார்.
இந்த நிலையில், ஷுப்மன் கில் 3-வது வீரராக களமிறங்குவதை விரும்பவில்லை என அவரது தந்தை லக்விந்தர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆடுகளத்தில் இறங்கி வந்து விளையாடுவது மாற்றத்தைக் கொடுத்துள்ளது. அவரது இயல்பான அந்த ஆட்டத்தை அவர் தடுத்து வைத்ததால் அழுத்தம் உருவாகி விக்கெட்டினை இழந்தார். அவர் சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இறங்கி வந்து அதிரடியாக ஆடக் கூடியவர். நாம் நமது இயல்பான ஆட்டத்தை தடுத்து நிறுத்தும்போது அழுத்ததிற்கு ஆளாகிறோம்.
ஷுப்மன் தொடக்க ஆட்டக்காரராக களகிறங்குவதை தொடர்ந்திருக்க வேண்டும். 3-வது இடத்தில் களமிறங்கும் அவரது முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீண்ட நேரம் உடைமாற்றும் அறையில் காத்திருப்பது அழுத்தத்தை அதிகரிக்கக் கூடும். 3-வது இடத்தில் களமிறங்குவது புஜாரா போன்று தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களுக்கு பொருந்தும். ஆனால், ஷுப்மன் கில்லுக்குப் பொருந்தாது. இருப்பினும், 3-வது இடத்தில் களமிறங்கும் அவரது முடிவை மதிக்கிறேன் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில் 110 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.