சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ அறிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பைக்கான அணியை ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் அறிவித்து வந்தன. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பைக்கான அணியை முதல் அணியாக அறிவித்தது. உலகக் கோப்பைக்கான அணியில் காலின் முன்ரோவின் பெயர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக காலின் முன்ரோ அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஓய்வு முடிவை அறிவித்த காலின் முன்ரோ பேசியதாவது: எனது கிரிக்கெட் பயணத்தில் நியூசிலாந்து அணிக்காக விளையாடியதை எப்போதும் எனது மிகப் பெரிய சாதனையாக நினைக்கிறேன். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் நியூசிலாந்து அணிக்காக 123 முறை விளையாடியுள்ளேன். அதை நினைத்து நான் எப்போதும் மிகவும் பெருமைப்படுவேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற இதுவே சரியான தருணம்.
டி20 போட்டிகளில் விளையாடி நீண்ட நாள்கள் ஆகியிருந்தாலும், டி20 போட்டிகளில் மீண்டும் நியூசிலாந்து அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை. டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், என்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை அதிகாரபூர்வமாக முடிப்பதற்கு இதுவே மிகச் சரியான தருணம் என்றார்.
காலின் முன்ரோ நியூசிலாந்து அணிக்காக ஒரு டெஸ்ட், 57 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி 3,010 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் முன்ரோ கடைசியாக நியூசிலாந்து அணிக்காக விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.