இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஷுப்மன் கில் 34 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர் மற்றும் ரீஹன் அகமது தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டாம் ஹார்ட்லி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸாக் கிராலி 76 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 104 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் டாம் ஹார்ட்லி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரீஹன் அகமது 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், சோயிப் பஷீர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 398 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையும் படிக்க: விளையாட்டு அமைச்சகத்துக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு
399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.