பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸôண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி அளித்த கடும் சவாலை சமாளித்து, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் வென்றார்.
4 மணிநேரம், 15 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-1, 4-6, 6-4, 6-7 (5/7), 6-1 என்ற செட்களில் அவர் வெற்றி பெற்றார்.
4-ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதியில் விளையாடிய ஸ்வெரெவுக்கு, முதல்முறையாக அதில் விளையாடிய கோபோலி கடும் சவால் அளித்தார். இந்த ஆட்டத்தின் வெற்றி, முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று தரும் என்பதால், இருவருக்குமே அது முக்கியமானதாக இருந்தது.
போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த ஸ்வெரெவ் 6-1 என முதல் செட்டை எளிதாக வென்றார். போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருந்த கோபோலியும் தனது பங்குக்கு 6-4 என 2-ஆவது செட்டைக் கைப்பற்றினார். விடாப் பிடியாக விளையாடிய ஸ்வெரெவ் 6-4 என 3-ஆவது செட்டை தனதாக்க, விட்டுக்கொடுக்காத கோபோலி 4-ஆவது செட்டை டை பிரேக்கர் வரை கொண்டு சென்று அதை 7-6 (7/5) என கைப்பற்றினார். இதனால் ஆட்டம் டிசைடர் செட்டை நோக்கி நகர்ந்தது. அதில் ஆக்ரோஷமாக விளையாடிய ஸ்வெரெவ் 6-1 என எளிதாக வென்று, முதல் கிராண்ட்ஸ்லாமுடன் வரலாறு படைத்தார்.
உலகத் தரவரிசையில் பல ஆண்டுகளாக டாப் 10 இடத்துக்குள்ளாகவே நிலைத்து வரும் ஸ்வெரெவுக்கு, முதல் கிராண்ட்ஸ்லாம் வெல்ல இந்தப் போட்டியே சரியான வாய்ப்பாக இருந்தது. ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் யானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகிய நட்சத்திர வீரர்கள் போட்டியிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளவராக ஸ்வெரெவே கணிக்கப்பட்டார். அதை அவர் நிரூபிக்கவும் செய்தார்.
மாஸ்டர்ஸ் போட்டிகளில் 7 பட்டங்கள், ஏடிபி ஃபைனல்ஸில் இருமுறை சாம்பியன், ஒலிம்பிக் தங்கம் என டென்னிஸின் எல்லா முக்கியமான போட்டிகளிலும் முத்திரை பதித்துள்ள ஸ்வெரெவுக்கு, கிராண்ட்ஸ்லாம் மட்டுமே கைக்கெட்டாமல் இருந்த நிலையில், தற்போது அதுவும் வசப்பட்டது.
இதற்கு முன் யுஎஸ் ஓபன் (2020), பிரெஞ்சு ஓபன் (2024), ஆஸ்திரேலிய ஓபன் (2025) ஆகியவற்றில் ஸ்வெரெவ் இறுதிக்கு வந்து தோல்வியைத் தழுவியுள்ளார். ஏடிபி டூர் போட்டிகளில் அவர் மொத்தமாக 24 பட்டங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபோலி ஏடிபி போட்டிகளில் 3 முறை சாம்பியனாகியுள்ள நிலையில், டேவிஸ் கோப்பை வென்ற இத்தாலி அணியிலும் அங்கம் வகித்தவராவார்.






