டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
Published on
Updated on
2 min read

டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் மீண்டும் முதல் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் டேரில் மிட்செல் களமிறங்கினர்.  ஷஹீன் அப்ரிடி முதல் ஓவரில் இம்முறை விக்கெட் எடுக்காத போதிலும் மெய்டன் ஓவராக வீசி நெருக்கடியைத் தந்தார். இந்த ஆட்டத்திலும் ஹசன் அலி ஓவரைக் குறிவைத்து நியூசிலாந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. எனினும், ரன் ரேட்டை பெரிதளவில் உயர்த்த முயற்சித்து அந்த நெருக்கடியிலேயே கப்தில் 17 ரன்களுக்கு ஹாரிஸ் ரௌஃப் வேகத்தில் போல்டானார். 

மிட்செலும் அதிரடிக்கு மாற முயற்சித்து இமாத் வாசிம் பந்தில் சிக்ஸர் அடித்து அடுத்த பந்திலேயே 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடிக்காக முன்கூட்டியே களமிறக்கப்பட்ட ஜேம்ஸ் நீஷம் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த விக்கெட்டுகள் என்ற சரிவிலிருந்து மீள்வதற்குள், கேப்டன் கேப்டன் வில்லியம்சன் 25 ரன்களுக்கு துரிதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். நியூசிலாந்து இன்னிங்ஸ் கடைசி வரை இதே பாணியில் சென்றதால், ரன் ரேட் கடைசி வரை உயரவில்லை.  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரௌஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அஸாம் களமிறங்கினர்.

மிட்செல் சான்ட்னர் வீசிய முதல் ஓவரில் பாபர் அஸாம் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார்.  ஆனால், டிம் சௌதி அடுத்த ஓவரில் கட்டுப்படுத்தி சிறப்பாக பந்துவீசினார். டிரென்ட் போல்ட் 1 பவுண்டரி கொடுத்தாலும் மேற்கொண்டு ரன்களைக் கொடுக்கவில்லை. இதனால், ரன் குவிக்க வேண்டிய நெருக்கடி தொடக்க ஆட்டக்காரர்களுக்கு ஏற்பட்டது. விக்கெட்டின் தேவையை உணர்ந்து பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச 3-வது முறையாக டிம் சௌதியையே அழைத்தார் கேன் வில்லியம்சன். இதற்குப் பலனாக முதல் பந்திலேயே பாபர் அஸாம் விக்கெட் நியூசிலாந்துக்குக் கிடைத்தது.

இதன் பின்னர் களமிறங்கிய ஃபக்கர் சமான், முகமது ஹபீஸ் இருவரும் தலா 11 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு புறம் சிறப்பாக விளையாடிய ரிஸ்வான் 33 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் வந்த இமாத் வாசிமும் 11 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் சோயப் மாலிக், ஆசிப் அலி இருவரும் ஆட்டமிழக்காமல் பொறுப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். பாகிஸ்தான் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com