மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் அதிரடியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பையில் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். பிஞ்ச் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, வார்னருடன் மிட்செல் மார்ஷ் இணைய இருவரும் அதிரடி காட்டத் தொடங்கினர். இந்த இணையைப் பிரிக்க பொலார்ட் முயற்சி அனைத்தும் தோல்வியடைந்தது. இதனால், நிறைய பந்துகள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் நிலை உருவானது.
ஆனால், வெற்றிக்கு 1 ரன் தேவை என்ற நிலையில் கிறிஸ் கெயில் பந்தில் மார்ஷ் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், வார்னர் அடுத்த ஓவரில் வெற்றியை உறுதி செய்தார்.
16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வார்னர் 56 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்.