

டி20 உலகக் கோப்பையை வென்றது கனவு போல இருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று அசைக்க முடியாத அணிகளாக திகழ்ந்த இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இறுதிப்போட்டியில் மோதின. அரையிறுதிப் போட்டியோடு வெளியேறும் அணி என்ற முத்திரையை தன்மீதிருந்து எடுத்தெடுறிந்த தென்னாப்பிரிக்க அணி, இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.
இந்த நிலையில், தூங்குவதற்கு நிறைய நேரமிருப்பதாகவும், டி20 உலகக் கோப்பை வெற்றியின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வருவதாகவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ரோஹித் சர்மா பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் பேசியதாவது: டி20 உலகக் கோப்பையை வென்றது கனவு போல் இருக்கிறது. உலகக் கோப்பையை வென்றது போன்ற ஒரு நிகழ்வு நடைபெறாததை போல் இருக்கிறது. உண்மையில், உலகக் கோப்பையை வென்றுவிட்டபோதிலும், உலகக் கோப்பையை வென்ற நிகழ்வு நடைபெறாதது போலிருக்கிறது.
நான் சரியாக தூங்கவில்லை. ஆனால், அது பெரிய பிரச்னையாக தெரியவில்லை. தூங்குவதற்கு நிறைய நேரமிருக்கிறது. உலகக் கோப்பையை வென்றுள்ள இந்த தருணத்தை கொண்டாட விரும்புகிறேன். ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென்பது எங்களது பல ஆண்டு கனவு. கடின உழைப்புக்குப் பிறகு அந்த கனவு நனவாகியுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.