பாழ்பட்டுக் கிடக்கும் அரசு ஐடிஐ கட்டடங்கள்

பெ.நா.பாளையம்: கோவை மாவட்ட அரசு தொழிற் பயிற்சி நிறுவனத்தில் பல கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. கூடுதல் கட்டடங்களால் பயன்பாடு குறைந்தது கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள இ

பெ.நா.பாளையம்: கோவை மாவட்ட அரசு தொழிற் பயிற்சி நிறுவனத்தில் பல கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

கூடுதல் கட்டடங்களால் பயன்பாடு குறைந்தது

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள இந்த நிறுவனத்தில், ஃபிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல்வேறு தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இங்கு, பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்தான் பயில்கின்றனர்.

இந்த ஐடிஐ ஆரம்பிக்கப்பட்டபோது கோவை மண்டலம் போதிய வளர்ச்சி பெறவில்லை. அதனால், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்கள் இங்கு தங்கிப் படிப்பதற்காக | ஒரு கோடி செலவில் விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டன. அப்போதைய தொழில் துறை அமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமன், இதைத் திறந்து வைத்தார்.

காலப்போக்கில் இந்த வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டதால் இதன் பயன்பாடு குறைந்து போய் விட்டது. மேலும் கோவையின் பல்வேறு பகுதிகளில் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டதால், இந்த ஐடிஐ-யில் சேர்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.

பாழடைந்த கட்டடங்கள்

இதன் காரணமாக, விடுதிக்கென கட்டப்பட்ட கட்டடங்கள் பாழடைந்து கிடக்கின்றன. ஜன்னல்கள், கதவுகள் திருடப்பட்டு விட்டன. இரவு நேரத்தில் இங்கு வரும் சமூக விரோதிகள், கட்டடத்தின் முன்புறம் தீவைத்து கேடு விளைவிக்கின்றனர். கட்டடங்களைச் சுற்றிலும் புதர் மண்டிக் கிடப்பதால் பாம்புகள் தொல்லையும் அதிகம்.

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்தும் வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். அந்தக் கட்டடமும் தற்போது பயன்படுத்தப்படுவதில்லை.

ஐடிஐ படிப்பில் ஆர்வம்

இந்த ஐடிஐ துவக்கப்பட்டபோது கற்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இடைப்பட்ட காலத்தில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு வரவேற்பு இருந்ததால் இங்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து விட்டது. ஆனால், தற்போது ஐடிஐ-க்களில் படிப்போருக்கு உடனடியாக வேலை கிடைக்கிறது. இதனால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக இங்கு பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வீணடிக்கப்படும் பணம்

எத்தனையோ அரசு கல்வி நிறுவனங்களில் போதிய கட்டமைப்பு வசதிகள் இருப்பதில்லை. ஆனால், இந்த நிறுவனத்திலோ கட்டடங்கள் இருந்தும், பராமரிக்கப்படுவதில்லை. இந்நிலையில், பெண்களுக்கு தொழிற் பயிற்சி கற்பிப்பதற்காக புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

புதிய கட்டடங்கள் கட்டி நிதியை வீணடிப்பதைக் காட்டிலும். இருக்கும் கட்டடங்களைப் பராமரித்து உபயோகப்படுத்தினால் பயனுடையதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com