சீர்காழி : நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம் ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆலாலசுந்தரம் உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் உள்ளன. இந்த 5 கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்நிலையில், இந்தப் பகுதியில் நடைபெறும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியது:
தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நாள் எண்ணிக்கையில் வேலை வழங்கப்படுவதில்லை. அப்படியே வேலை வழங்கப்பட்டாலும் ஊதியமாக ரூ. 45 மட்டுமே வழங்கப்படுகிறது. அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளின் உறவினர்கள் உள்ளிட்ட நபர்களுக்கே அந்த வேலையும் அளிக்கப்படுகிறது. வேலை வழங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலைகள் நடைபெற்றதாகக் காட்டி, பணம் பெறப்பட்டுள்ளது. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும், அரசின் இலவச தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில், பட்டா இல்லாத 26 பேருக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஆணையரிடம் பல முறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.
மேலும் இந்தத் திட்டத்தின் வேலை செய்வதற்கான அடையாள அட்டையில் கையெழுத்துப் போட்டுள்ள ஒருவர் ஊதியம் பெறுவதற்கான பதிவேட்டில் கைரேகை வைத்துள்ளார். இது போன்று ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் புகார் குறித்து கொள்ளிட ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு அவர் கூறியது:
100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல், முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. இதேபோல, தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டதிலும் ஊழல் நடைபெறவில்லை. முறையாகவே தொகுப்பு வீடுகள் தரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரே தொகுப்பு வீடு பயனாளிகளிடம் விசாரணை செய்துள்ளார் என்றார் அவர்.
அரசின் நலத் திட்டங்கள் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே. எனவே, கொள்ளிடம் ஒன்றியத்தில் நடைபெறும் வேலை உறுதியளிப்புத் திட்டம், தொகுப்பு வீடுகள் ஒதுக்கப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து, உரிய பயனாளிகளுக்கு நலத் திட்டப் பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










