டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விஷத்தன்மை கொண்ட 1,250 டன் கோதுமை பறிமுதல்: சுங்கத் துறை நடவடிக்கை

திருவொற்றியூர், மார்ச் 23: ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,250 டன் கோதுமை விஷத்தன்மையுடன் இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:37 pm

முகவை க.சிவக்குமார்

திருவொற்றியூர், மார்ச் 23: ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,250 டன் கோதுமை விஷத்தன்மையுடன் இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் துறைமுகத்திலிருந்து கோதுமை இறக்குமதி செய்தது. எம்.எஸ்.சி. பெக்கி என்ற கப்பலில் 50 கண்டெய்னர்களில் கொண்டுவரப்பட்ட 1,250 டன் கோதுமையின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். தற்போது சென்னையை அடுத்த மீஞ்சூரில் உள்ள தனியார் சரக்குப் பெட்டக நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கோதுமை இறக்குமதி செய்ய மத்திய பூச்சிக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் மத்திய உணவு பொருள் ஆய்வு துறைகளின் ஆய்வக முடிவுகளின் அடிப்படையிலான அனுமதி தேவை. இந்த ஆய்வக முடிவுகளின்படிதான் இறக்குமதியான சரக்குகளை சுங்கத் துறையினர் விடுவிப்பது வழக்கம்.

மைசூரில் பரிசோதனை:

இதே நடைமுறையில் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பூச்சிக் கட்டுப்பாட்டு துறை ஆய்வகத்துக்கும், மைசூரில் உள்ள மத்திய உணவுப் பொருள் ஆய்வகத்துக்கும் சுங்கத் துறையினர் கோதுமை மாதிரிளை அனுப்பினர்.

÷இதில் மைசூர் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டபோது, "கோதுமை விஷத்தன்மை வாய்ந்தது. இதை மனிதர்களோ, விலங்குகளோ சாப்பிட்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக' சோதனை முடிவில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

÷இந்த ஆய்வக பரிசோதனை முடிவுகள் குறித்து சுங்கத் துறை புலனாய்வுப் பிரிவு (டி.ஐ.யூ.) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். முடிவில் 1,250 டன் கோதுமையையும் பறிமுதல் செய்து உத்தரவிட்டனர். மேலும் உரிய விசாரணைக்குப் பிறகு இவை அழிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

சி.பி.ஐ. பிடியில் இறக்குமதி நிறுவனம்

விஷத்தன்மை வாய்ந்த கோதுமை இறக்குமதி செய்யப்பட்டு அதை வெளியே கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சில தொண்டு நிறுவனங்கள் புகார் தெரிவித்து வந்தன. இந்நிலையில் மத்திய புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ.) சென்னை பிராந்திய அதிகாரிகள் இரு நாள்களுக்கு முன்பு மீஞ்சூரில் உள்ள சரக்குப் பெட்டக நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு கோதுமை இருந்த கண்டெய்னர்கள் சிலவற்றை முழுவதும் கீழே கொட்டி ஆய்வு நடத்தி உள்ளனர். பின்னர் மாதிரிகளையும் அவர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

இந்தியாவில் போதுமான அளவில் கோதுமை கையிருப்பு வைக்கப்பட்டிருப்பதாக மத்திய விவசாயம் மற்றும் உணவு அமைச்சகங்கள் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து விஷத்தன்மை வாய்ந்த கோதுமையை இறக்குமதி செய்வதற்கு காரணம் என்ன? மேலும் இதில் ஹவாலா பண பரிமாற்றங்கள் ஏதேனும் நடந்துள்ளனவா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்காணிப்பு அவசியம்

வெளிநாடுகளில் இருந்து பருப்பு, கோதுமை, தானியங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் விலங்குகளுக்காக ஒதுக்கப்படும் உணவுப் பொருள்களைக்கூட இந்தியாவுக்கு இறக்குமதி செய்து சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றன. இது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.