/

மின்னணு வேளாண்மைத் திட்டம் விரிவாக்கம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆலங்குடி: வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செயல்படுத்தப்படும் மின்னணு வேளாண்மை (இ.வேளாண்மை) திட்டத்தை அனைத்துக் கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  மேலும், போ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:57 pm

கே. சுரேஷ்குமார்

ஆலங்குடி: வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செயல்படுத்தப்படும் மின்னணு வேளாண்மை (இ.வேளாண்மை) திட்டத்தை அனைத்துக் கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

 மேலும், போதிய எண்ணிக்கையில் வேளாண் களப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

 வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் கண்டுபிடிக்கப்படும் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் வேளாண் விரிவாக்க அலுவலர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

 அதேவேளையில், கண்டுபிடிப்புகள் அதிகளவில் இருப்பினும், அதை விவசாயிகளிடத்தில் கொண்டு சேர்ப்பதில் நிலவும் பின்னடைவுக்கு வேளாண் துறையில் போதிய எண்ணிக்கையில் களப் பணியாளர்கள் இல்லாததே முக்கியக் காரணம்.

 இதனால், பயிர் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் போது பூச்சி மருந்துக் கடைக்குச் சென்று, அந்தக் கடைக்காரர் கொடுக்கும் பூச்சிக் கொல்லி மருந்தையே உபயோகிக்க வேண்டியுள்ளது.

 இதற்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உலக வங்கி, தமிழக அரசின் நீர்வள, நிலவளத் திட்டத்தின் உதவியுடன் மின்னணு வேளாண்மை என்ற திட்டத்தை நிகழாண்டு அறிமுகப்படுத்தியது.

 இதன்படி, சாகுபடி தொடங்கி பயிர் அறுவடை வரை ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் அந்தந்தக் கிராமங்களில் பணியாற்றும் இ.வேளாண்மை களப் பணியாளர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் தோட்டத்தை ஆய்வு மேற்கொண்டு, பூச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்களிடம் தகவல் பெற்று, விவசாயிக்கு விளக்கம் அளிப்பர். இந்தத் திட்டம் இப்போது தெற்கு வெள்ளாறு உப வடிநிலப் பகுதியின் கீழ் வரும் கிராமங்களில் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

 இடுபொருள்கள் விலை உயர்வு, உற்பத்திப் பொருள்களுக்கான விலை குறைவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்தியில், உணவுப் பொருளை அதிகளவு உற்பத்தி செய்ய வேண்டுமெனில், மின்னணு வேளாண்மைத் திட்டத்தை அனைத்துக் கிராமங்களிலும் அமல்படுத்தி, போதிய எண்ணிக்கையில் களப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

 இதுகுறித்து விவசாயி அ. கருப்பையா கூறியது:

 ஆலங்குடி பகுதியில் ஆழ்குழாய்க் கிணறுகளைக் கொண்டு நெல், வாழை, சோளம், கரும்பு, கத்தரி, வெண்டை, பாகல், புடலை, வெள்ளரி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், எந்த மருந்தைத் தெளிப்பது என்பது குறித்து யாரிடமும் கேட்க முடியவில்லை. எனவே, ஒவ்வொன்றாகத் தெளித்து, உரிய பூச்சிக் கொல்லி மருந்தைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இதனால், பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, அனைத்துக் கிராமங்களிலும் மின்னணு வேளாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.

 இதுகுறித்து புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறியது:

 இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவதற்கு மின்னணு வேளாண்மைத் திட்டம் மிகவும் பயன்படும். இந்தத் திட்டம் இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு வெள்ளாறு பகுதியில் இரண்டு கிராமங்களில் செயல்படுத்தப்படுவதாகத் தெரிய வந்ததுள்ளது. இந்தத் திட்டத்தை அனைத்துக் கிராமங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில், அந்தத் துறையில் திறமை வாய்ந்த களப் பணியாளர்களை போதிய எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.