போக்குவரத்து நெரிசலில் திணறும் பண்ருட்டி நகரம்

பண்ருட்டி, ஜூன் 24: பண்ருட்டி நகரில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் இல்லாததும், ச
போக்குவரத்து நெரிசலில் திணறும் பண்ருட்டி நகரம்
Updated on
1 min read

பண்ருட்டி, ஜூன் 24: பண்ருட்டி நகரில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் இல்லாததும், சாலை ஆக்கிரமிப்புகளுமே நெரிசலுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

வியாபார நிலையமான பண்ருட்டியில் நாள்தோறும் போக்குவரத்து பெருகி வருகிறது. கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலை, தஞ்சாவூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை பண்ருட்டி நகரின் வழியாக செல்கிறது. இவ்விரு சாலைகளும் நான்கு முனை சந்திப்பை கடந்து செல்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் நான்கு திசைகளிலும் சென்று வருகின்றன.

விழுப்புரம்-மயிலாடுதுறை இடையிலான ரயில்வே பாதை பண்ருட்டியில் தஞ்சாவூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கடந்து செல்கிறது. இவ்வழியாக ரயில்கள் கடந்து செல்லும்போது, கேட் மூடப்படுவதால் சென்னை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பண்ருட்டி நான்கு முனை சந்திப்பையும் தாண்டி வாகனங்கள் நிற்பதால், அனேக சமயங்களில் இதன் பாதிப்பு கடலூர்-சித்தூர் சாலையிலும் எதிரொலிக்கிறது.

சென்னை சாலையில் நான்கு முனை சந்திப்பு அருகே காய்கறி கடைகள் உள்ளன. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி வியாபாரம் நடைபெறுகிறது. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை ஏற்றி இறக்குவதாலும், காய்கறி வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து மொத்த வியாபாரம் செய்வதாலும், சிறு வியாபாரிகள் கடைகளை சாலையிலேயே போட்டு விற்பனை செய்வதாலும் சாலை குறுகி அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடக்கின்றன.

சாலையில் வாகனங்கள் நிறுத்துவதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும், அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட்டாலும் சென்னை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், தடையும் ஏற்படுகிறது.

மாற்றுவழி பாதை: பண்ருட்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நகர நிர்வாகம் மாற்று வழியில் வாகனங்களை திருப்பிவிட்டுள்ளது. மேலும் மாற்றுவழிப் பாதையும் அமைத்து வருகிறது.

இருப்பினும் நகரின் முக்கிய சாலைகளில் குறிப்பாக சென்னை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், நடைபாதை கடைகளையும் அகற்றி தடை மற்றும் விபத்தில்லா போக்குவரத்துக்கு நகர நிர்வாகம் மற்றும் காவல்துறை வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com