

திருவள்ளூர், மார்ச் 4: மின்தட்டுப்பாடு எதிரொலியாக காக்களூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய தொழிற்பேட்டைகளில் காக்களூர் தொழிற்பேட்டையும் ஒன்றாகும். திருவள்ளூரில் இருந்து ஆவடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இத்தொழிற்பேட்டை கடந்த 1980-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தமிழக அரசின் தொழில்வணிகத்துறை சார்பில் தொடங்கப்பட்ட இத்தொழிற்பேட்டை 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு உடையதாகும். பின்னர் இத்தொழிற்பேட்டை சிட்கோ நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இங்கு தற்போது 200-க்கும் மேற்பட்ட உற்பத்தி பிரிவுகள் உள்ளன. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு கெமிக்கல், எலட்க்ரிக்கல், ஆட்டோமொபைல், பிராசசிங் தொடர்பான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மின்வெட்டு: தமிழகம் முழுவதும் நிலவும் கடும் மின்வெட்டு இங்கும் உள்ளதால் காக்களூர் தொழிற்பேட்டையினர் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். 8 மணி நேரம் மின்வெட்டால் உற்பத்திப் பிரிவுகள் தொடர்ந்து இயங்க முடியாமல் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
விநியோகம் செய்யப்படும் மின்சாரத்தை சீராக முறைப்படுத்தி வழங்க வேண்டும் எனக்கோரி ஏற்கெனவே உற்பத்தியாளர்கள், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
மின்சார வார விடுமுறை: இந்நிலையில் தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு மின்சார வார விடுமுறை அறிவித்துள்ளது. வேலூர் மண்டலத்துக்குட்டப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு சனிக்கிழமை வார விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆலை உற்பத்தி பிரிவுகளை இயக்கக்கூடாது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எச்.டி, எல்.டி.சிடி, எல்.டி என மின் உபயோகிப்பாளர்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 1.1.2011 முதல் 1.1.2012 வரையிலான காலத்தில் அதிகபட்சமாக பயன்படுத்திய மூன்று மாத மின் பயன்பாட்டு சராசரியைக் கணக்கில் கொண்டு அதில் 10 சதவீதத்தை மட்டுமே சனிக்கிழமைகளில் பயன்படுத்தலாம்.
மின்சார விடுமுறை நாளில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் மூன்று முதல் 5 மடங்கு வரை மின் கட்டணத் தொகை வசூலிக்கப்படும் எனவும் அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காக்களூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரேசன் கூறியது:
சனிக்கிழமைகளில் மின்சார வார விடுமுறையை அறிவித்துள்ளனர். அப்போது கூடுதல் மின்சாரம் பயன்படுத்தினால் கடும் அபராதம் விதிக்கப்படும் எனத் தெளிவாக மின்வாரியம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் தற்போதும் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.பல்வேறு தொழிற்பிரிவுகள் மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. எப்போது மின்சாரம் வழங்கப்படும், துண்டிக்கப்படும் என்பது கூட முறையாகத் தெரிவிக்கப்படவில்லை.
ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வரையறுப்பதில் கூட கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.