தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம்: மூடுவிழா காணும் கோவை நகைக் கடைகள்

விலையில் அதிக ஏற்ற, இறக்கம், தேவையான தங்கம் கிடைக்காதது, விற்பனையில் கடும் சரிவு ஆகிய காரணங்களால் கோவையில் பல பெரிய நகைக் கடைகளை மூடவும் பிறருக்கு விற்பனை செய்யவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம்: மூடுவிழா காணும் கோவை நகைக் கடைகள்
Updated on
2 min read

விலையில் அதிக ஏற்ற, இறக்கம், தேவையான தங்கம் கிடைக்காதது, விற்பனையில் கடும் சரிவு ஆகிய காரணங்களால் கோவையில் பல பெரிய நகைக் கடைகளை மூடவும் பிறருக்கு விற்பனை செய்யவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

ரூபாயின் மதிப்பு சரிவதைத் தவிர்ப்பதற்காக மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை எடுத்த நடவடிக்கையால் தங்கத்தின் இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் தங்கம் இறக்குமதி மீதான வரி உயர்த்தப்பட்டது.

பொதுவாக திருமணத்துக்காகவும் சில விசேஷங்களின்போதும் மட்டுமே மக்கள் தங்க, வைர நகைகளை வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, தங்கம் சிறந்த முதலீடாக அனைவருக்கும் தோன்றியது. இதனால் தங்கத்தில் அதிக அளவில் முதலீடுகளைச் செய்தனர். அப்போது தங்க விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது.

இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன் ஒரு கிராம் தங்கம் ரூ. 3,050-ஆக உயர்ந்தது. தற்போது கிராம் ரூ. 2,600 வரை குறைந்து ரூ. 2,750 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் 20 முதல் 30 சதவீதம் வரை குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது.

ஆனால், விலை அதிகமாக இருந்தபோது நகை வாங்கிய கடை உரிமையாளர்களுக்கு இப்போது அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கித் தங்கம் வாங்கிய பலர் வட்டி கட்ட முடியாமல் தங்க நகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

தங்கம் விற்பனையில் காலையில் ஒரு விலை, மாலையில் வேறு விலை உள்ளது. விலையில் அதிக ஏற்ற இறக்கம் இருப்பதால், மக்களும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பெரும்பாலான நகைக் கடைகளில் நகை விற்பனை பெருமளவில் குறைந்துவிட்டது. முன்பு தினமும் விற்பனையான அளவில் 10 முதல் 20 சதவீதம் விற்பனை ஆனாலே பெரிய விஷயம் என்ற நிலை தற்போது உள்ளது.

இறக்குமதியாகும் தங்கக் கட்டிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டதால் நகைக் கடைகளுக்குத் தங்கக் கட்டிகளும் கிடைப்பதில்லை. இறக்குமதி வரி உயர்ந்துள்ளதாலும், விலையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படுவதாலும், பெரும்பாலான நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள் தேவைக்கு மட்டும் தங்கக் கட்டிகளை வாங்கிக் கொள்கின்றனர். இதனால் மொத்த விற்பனையிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

கோவையைப் பொருத்தவரையில் 500-க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளன. வியாபாரம் குறைந்துவிட்டதால் பெரும்பாலான கடைகளில் ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. வியாபாரம் இல்லாததால் பல கடைகளை விரைவில் மூடுவதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது.

அதிக முதலீட்டுடன் கோவையில் துவங்கப்பட்ட ஒரு சில பெரிய நகைக் கடைகளை விற்பனை செய்வதற்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக பிரபல நகைக் கடையின் மேலாளர் கூறியது:

÷கோவையில் உள்ள நகைக் கடைகளில் வியாபாரம் மிகவும் குறைந்துவிட்டது. அதிக ஏற்ற இறக்கமான விலையும் இதற்கு காரணம். சொந்த இடம், சொந்த முதலீடு மூலம் கடை வைத்துள்ளவர்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது.

÷நகை விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கிவிட்டு, இப்போது தங்கத்தின் விலை குறைந்து, வியாபாரமும் இல்லாததால் பலர் கடைகளை மூடுவதற்குத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது என்றார்.

கடத்தல் தங்கம் அதிகரிப்பு

இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் இந்தியாவுக்குக் கடத்தப்படும் தங்கக் கட்டிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் தங்கக் கட்டிகளின் இறக்குமதி பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் தங்கக் கட்டிகள் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து கடத்தி வரப்படுவதாகத் தெரிகிறது.

÷நகை விற்பனை மிகக் குறைவு என்பதால் வணிகவரித் துறையினருக்குச் செலுத்த வேண்டிய வாட் வரியும் கடந்த 2 மாதங்களாகக் கணிசமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com