மதுரை: தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கான விவசாயம், குடிநீர் மற்றும் சில தனியார் குளிர்பான தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது.
விவசாயத்திற்கு கடும் பாதிப்பை உண்டாக்கும் என்பதால் தாமிரபரணியால் பயன்பெறும் அனைத்து மாவட்ட மக்களும் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் கொடுக்கப்படுவதை எதிர்த்து போராடினர். இந்நிலையில்தான் தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விற்பனை செய்யப்படுவதை தடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
குறைந்த விலைக்கு தண்ணீரை வாங்கும் இந்நிறுவனங்கள் அதிக விலைக்கு குடிநீர் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்து வருகிறது என்றும், நாள் ஒன்றுக்கு 37 லட்சம் லிட்டர் வரையில் தண்ணீர் குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் இந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமிரபரணியில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகிக்க தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவானது தென்மாவட்ட மக்களுக்கு பெரும் நிம்மதியை தோற்றுவித்துள்ளது