புதுக்கோட்டை: அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை நியமனம் செய்வதற்காக மருத்துவ தேர்வு வாரியம் மூலம் வரும் ஜனவரி 22 ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது என்றார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபிறகு மேலும் அவர் கூறியது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்ததன் அடிப்படையில் ரூ.229 கோடி மதிப்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தமிழகம் முழுதும் காலியாக உள்ள அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு முதல்வரால் உருவாக்கப்பட்ட மருத்துவ தேர்வு வாரியம்(MRB) மூலம் வரும் ஜனவரி.22 -ஆம் தேதி தேர்வு நடத்தப்படும். மேலும், அனைத்துப்பி்ரிவு ஊழியர்களும் நியமனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.