சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது ஒரு தண்டனை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆளுங்கட்சியினரால் வாக்காளர்களுக்கு சரளமாக பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் நேற்றிரவு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது, நியாயமாக நேர்மையாக இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு எல்லாம் ஒரு தண்டனை.
மேலும் பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்தால், பணம் கொடுத்த கட்சியின் வேட்பாளர் மட்டும் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
இவ்வாறு விஜயகாந்த் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.