சென்னை: அதிமுகவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்தினை நீக்கி டிடிவி தினகரன் செய்த அறிவிப்பினை, வெறும் வெற்றுக் கூத்து என்று வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார்.
பலகட்ட காத்திருப்புகளுக்குப் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக இரு அணிகளின் இணைப்பு நிகழ்வானது, ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் இருவரும் பேசிய பிறகு கட்சி பதவிகள் தொடர்பாகவும், தமிழக அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தின் துணை முதல்வராகவும், அதிமுக வழிகாட்டல் குழு ஒருங்கிணைப்பாளராகவும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டார். அத்துடன் மாநிலங்களவை உறுப்பினரான வைத்திலிங்கம் இந்த குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்,ஏக்கள் 19 பேர் இன்று காலை ஆளுநர் மாளிகை சென்று ஆளுநரை சந்தித்தனர். அப்பொழுது அவரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், எனவே அவரை மாற்ற உதவ வேண்டும் என்று கோரிக்கை அளித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக அதிமுகவின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு விரோதமாக செயல்பட்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வைத்திலிங்கம் நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் தரப்பு அறிக்கை வெளியிட்டது.
இதற்கு பதில் அளித்த வைத்திலிங்கம் தன்னை கட்சியில் இருந்து நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்றும், அவரது நியமனம் செல்லாது என்று தாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தினகரன் இந்த நடவடிக்கை ஒரு வெற்றுக் கூத்து என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.