தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக புகைப்படம் வெளியிட்டது தொடர்பான வழக்கில் உசிலம்பட்டி இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ஒக்கி புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அண்மையில் வந்தார். அப்போது பிரதமரை, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்தார். இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. அதில் தமிழக முதல்வரின் சட்டைப் பையில் பிரதமரின் படம் இருப்பதைப் போல 'மார்பிங்' செய்த புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.
முதல்வர் மீது அவதூறு பரப்பும் வகையில் மார்பிங் செய்யப்பட்ட படம் வெளியிடப்பட்டதாகக் கூறி கன்னியாகுமரி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அலெக்ஸ்பாண்டியன், லட்சுமண மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விஜய் (24) என்பவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் போலீஸார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.