ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரீனாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளன்று சென்னை மாநகரின் பல பகுதிகளில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
மெரீனாவில் நடத்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி மற்றும் பி.குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர், சீலிடப்பட்ட உறையில் நிலை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியை(லத்தி) பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
மேலும் மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்துவதற்கு யார் அனுமதி அளித்தார் என்பதை தெரியப்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த சம்பவம் தொடர்பாக, ஏற்கெனவே ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
ஆகையால், இந்த மனுவுக்குப் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி 2 வாரத்துக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.