தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான எம்.என். கிருஷ்ணமணி (68), பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை (பிப்ரவரி 15) காலமானார்.
பெங்களூருவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த போது, உடல்நலக் குறைவு காரணமாக ஒய்ட்பீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது மனைவி ராதா, 2007-ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். இத்தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் மூவரும் வழக்குரைஞர்கள். மகன் ஓவியர். உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவராக நான்கு முறையும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக மூன்று முறையும், தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) தலைவராக ஒரு முறையும் கிருஷ்ணமணி பதவி வகித்துள்ளார். 2016-ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரிடமிருந்து "பத்மஸ்ரீ' விருது பெற்றுள்ளார். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட அவர், புட்டப்பர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தர். பல ஆன்மிக நூல்களை எழுதியவர்.