அலங்காநல்லூர்: தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று இருக்கும் என்று அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்கக் கோரி திமுக சார்பில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று நடத்தும் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாகவே ஜல்லிக்கட்டு இருந்து வந்துள்ளது.
உச்ச நீதிமன்ற அறிவுரைகளை அதிமுக ஆட்சி காலத்தில் பின்பற்றாததால்தான் ஜல்லிக்கட்டுக்குக் கொடுத்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துவிட்டு திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தியிருப்போம்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மத்திய அரசு சார்பில் சொல்லி வந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஜல்லிக்கட்டு வரும்; ஆனால் வராது என்ற நிலைதான் உள்ளது. இதை நகைச்சுவையாக சொல்லவில்லை. வேதனையோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டு என்றாலே அலங்காநல்லூர்தான் ஞாபகம் வரும். எனவேதான் இந்த போராட்டத்தை அலங்காநல்லூரில் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று ஸ்டாலின் பேசினார்.
மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொடுத்த வாக்குறுதி என்னவானது? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.