அந்நியச் செலாவணி வழக்கு: டி.டி.வி.தினகரன் ஆக.1-இல் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

அந்நியச் செலாவணி வழக்கு: டி.டி.வி.தினகரன் ஆக.1-இல் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி டி.டி.வி. தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி டி.டி.வி. தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அதிமுக துணை பொதுச் செயலரான டி.டி.வி.தினகரன், லண்டனில் டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிறுவன இயக்குநரான அவர், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி இந்தியாவில் இருந்து 1,04,95,313 அமெரிக்க டாலரை பிரிட்டனில் உள்ள ஒரு வங்கிக்கு அனுப்பியதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
ரிசர்வ் வங்கி அனுமதியின்றி லண்டனில் ஹோட்டல் கட்டுவதற்கு 36,36,000 அமெரிக்க டாலர்,10 ஆயிரம் பவுண்ட் முதலீடு செய்ததாக தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த இரு வழக்குகளின் விசாரணையும், எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெறுகிறது. இரு வழக்குகளிலும் தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், அரசு தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை அண்மையில் தொடங்கியது.
இந்நிலையில், தினகரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் குளறுபடி உள்ளதாகக் கூறி, அவரது வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை பெற்றனர். இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், டி.டி.வி. தினகரன் மீது ஏற்கனவே பதியப்பட்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்தும், ஜூலை 31-ஆம் தேதிக்குள் குற்றச்சாட்டுகளை மீண்டும் பதியக் கோரியும், அதற்கு முன் டி.டி.வி. தினகரன் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் எனவும் எழும்பூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இவ்வழக்கு எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தரப்பு வழக்குரைஞர்கள், இந்த வழக்கில் தினகரன் மீது எந்த ஆய்வும் செய்யப்படாமல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, குற்றங்களின் மீது ஆய்வு நடத்த வேண்டும் என வாதிட்டனர். இதற்கிடையே இந்த வழக்கு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பு வழக்குரைஞர்களும் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதித்துறை நடுவர் மலர்மதி, ஆகஸ்ட் 1-ஆம் தேதி நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு டி.டி.வி. தினகரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்; அன்றைய தினம் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com