சென்னை: தமிழக டெல்டா பகுதி விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் ரூ.56.92 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
போதிய அளவு நீர் இல்லாத காரணத்தால், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக குறுவை சாகுபடி பணிகளுக்கு என மேட்டூர் அணையில் இருந்து குறித்தபடி ஜூன் 12-ஆம் தேதி நீர் திறக்கப்படவில்லை. எனவே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின்படி, தமிழக டெல்டா பகுதி விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி பணிகளுக்கு என ரூ.56.92 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் குறுவை சாகுபடி பருவம் என்பது ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான பருவமாகும். இதில் 1.32 லட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. இதற்கு தற்போதைய நிலையில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, விவசாயிகளுக்கு கடந்த ஆண்டினை போலவே தினசரி 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அதேபோல பயறு வகைகளை சாகுபடி செய்வோருக்கு ஏக்கருக்கு ரூ.960 மானியமாக வழங்கப்படும்.
பசுந்தாழ் உர பயிர் சாகுபடிக்கு நூறு சதவீத தொகை மானியமாக வழங்கப்படும். அத்துடன் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் நிலத்தின் மகசூல் தன்மையினை மேம்படுத்தும் விதமாக, மண் பரிசோதனை செய்யும் வகையில் ஏக்கருக்கு ரூ.1200 மானியமாக வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.