மணல் அள்ள மூன்று ஆண்டுகளுக்குப் பின் முற்றிலும் தடை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் அடுத்த மூன்று ஆண்டுகளில் மணல் அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்படும். அதுவரை குவாரிகளில் இருந்து மணல் சப்ளை செய்யும் பணியை அரசே மேற்கொள்ளும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக, திமுக ஆட்சிக் காலங்களில்தான் மணல் கொள்ளை மிக அதிக அளவில் நடந்துள்ளன. தமிழகத்தில் மணல் இருக்கிற பெருவாரியான இடங்களில் முடிந்தவரை மணல் அள்ளி, தமிழகத்தையே பாலைவனமாக மாற்றிவிட்ட பிறகு நல்லவர்கள் போல பேசுவது ஒட்டு மொத்த மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது. இதை தேமுதிக கண்டிக்கிறது. எனவே, மணல் அள்ளுவதை உடனடியாகத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.