

நீரா இறக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்கள் உள்பட டெல்டா மாவட்டங்களில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி என மாநிலத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் தென்னை பிரதான பயிராக இருக்கிறது.
தற்போது பல இடங்களில் கடும் வறட்சியினால் பாதிக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பட்டுப்போய்விட்டன. மீதமுள்ள தென்னையைக் காப்பாற்ற வேண்டிய கடமை இருக்கிறது.
தென்னையில் இருந்து தாய்ப்பாலுக்கு நிகரான லாரிக் அமிலம் உள்ள நீராவை இறக்கி, விற்பனை செய்ய அனுமதி கிடைத்தால் தென்னை விவசாயிகள் பயன்பெறுவர்.
சட்டப்பேரவையில் ஜூலை மாதம் அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் நீரா இறக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிடவில்லை.
தற்போது, தென்னை விவசாயிகளுக்குத் தென்னை சாகுபடியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தமிழக அரசு கவனத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் தென்னை விவசாயத்தை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் நீரா இறக்க அனுமதி வழங்கப்பட்டதால் கடந்த பல வருடங்களாக அங்கே நீரா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனவே, தென்னை சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. நீரா இறக்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.