

தமிழகத்தில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா என ஆளுநர் ஆய்வு செய்வது வரவேற்கக்கூடியது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மீண்டும் தெய்வ பக்தி, தேச பக்தி மிளிரத் தொடங்கியுள்ளதால், பாஜக வளர்ச்சிக்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. ஹிந்து தீவிரவாதம் என்ற நடிகர் கமலஹாசனின் கருத்தும், அந்த சொல்லும் தவறானது. ஹிந்துவாக இருப்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது.
ஒரு மாநிலத்தில் அவசர காலத்தின்போது மட்டும் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது ஆளுநரின் பணி எனக் கருதுவது தவறு. அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என ஆய்வு செய்து கேட்டறிவதும் அவரது பணிதான். அந்த வகையில் தமிழக ஆளுநரின் செயல்பாடு வரவேற்கக்கூடியது. மாநில அரசும் அதனை வரவேற்றுள்ளது. இதில் மாநில அரசின் அதிகாரம் ஏதும் பறிக்கப்படவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை நடந்தால் நல்லதுதான்.
தமிழக அரசின் செயல்பாடு வரவேற்கக்கூடியதாக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, நிர்வாகத்தை படிப்படியாக நிலைநிறுத்தி வருகின்றனர்.
தமிழகத்திலும், புதுவையிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி உள்ளாட்சி நிர்வாகத்தை காக்க வேண்டும். தேர்தல், கூட்டணி பற்றி பாஜக சிந்திக்கவில்லை என்றார் இல.கணேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.