

தனியார் பால் நிறுவனங்கள் குறித்துப் பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனக் கலப்படம் உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியிருந்தார். இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹட்சன், டோட்லா மற்றும் விஜய் ஆகிய 3 தனியார் பால் நிறுவனங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தன. அதில், தங்களது நிறுவனத்தைப் பற்றி அமைச்சர் ஆதாரமின்றிப் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும். தங்களது நிறுவனங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலா ரூ.1 கோடி வீதம் ரூ. 3 கோடியை இழப்பீடாக வழங்க உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆதாரமில்லாமல் பால் கலப்படம் குறித்துப் பேச அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்குத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கு முடியும் வரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் குறித்துப் பேச விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டார். வழக்கு முடியும் வரை தனியார் பால் நிறுவனங்கள், 3 மாதத்துக்கு ஒருமுறை பாலின் தரத்தை அரசு அங்கீகரித்த ஆய்வகங்களில் ஆய்வுக்கு உட்படுத்தி, ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.