/

இரு மாநிலப் பிரச்னைகளை பேசித் தீர்ப்போம்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

தமிழகம்-கேரளம் இடையே எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதனை பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்ப்போம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:41 pm

DIN

தமிழகம்-கேரளம் இடையே எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதனை பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்ப்போம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 21) சந்தித்துப் பேசினார் கேரள முதல்வர் விஜயன். இந்தச் சந்திப்பு நண்பகல் 12.15 மணி முதல் 12.45 மணி வரை நடைபெற்றது. சந்திப்புக்குப் பிறகு, முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகும். நிர்மல் சீட்டுக் கம்பெனி விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பேசினேன். இந்தக் கம்பெனியானது, தனது பிரதான செயல்பாடுகளை கேரளத்தில் வைத்திருந்தனர். அவர்களது அலுவலகம் கன்னியாகுமரியில் இயங்கி வருகிறது. அந்த சீட்டு நிறுவனம் மிகப் பெரிய அளவில் முறைகேடுகளைச் செய்துள்ளது. அது குறித்து விவாதித்தேன். மேலும், மாலையில் எனக்கு கூட்டம் (விடுதலைச் சிறுத்தைகள் ஏற்பாடு செய்துள்ள மாநில சுயாட்சி மாநாடு) இருக்கிறது. அதில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்தேன். சென்னை வந்ததால் முதல்வரைச் சந்தித்துப் பேசினேன் என்றார்.
முல்லைப் பெரியாறு விவகாரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவு உயர்வு, அங்கு தமிழக அதிகாரிகளை அனுமதிப்பது தொடர்பாக கேள்விகளை எழுப்புகிறீர்கள். தமிழக, கேரள மக்கள் எப்போதும் சகோதர-சகோதரிகளாக உள்ளனர்.
எனவே, நீங்கள் குறிப்பிடும் பிரச்னைகளை அதிகாரிகள் நிலையிலேயே முதலில் விவாதிப்பர். அதன் பின் அதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் இரு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் அமர்ந்து விவாதிப்போம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அமர்ந்து பேசி, பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண்போம் என்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.