தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மைய இயக்குநர்

வெப்பத்தின் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் இயல்பைவிட அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

Updated On :22 மார்ச் 2017, 7:40 pm

வெப்பத்தின் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் இயல்பைவிட அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
வடகிழக்கு பருவமழையில் 62 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக, கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மார்ச் மாதத்திலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பத்தின் காரணமாக ஏற்படும் வெப்பச்சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி, கோவை மாவட்டம் வால்பாறையில் மட்டும் 10 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்: இந்நிலையில் வெப்பத்தின் தாக்கமானது இயல்பைவிட ஏப்ரல், மே மாதங்களில் அதிகரிக்கத் தொடங்கும் எனறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:
கோடை வெயில் இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை. மார்ச் மாதம் என்பது குளிர்காலத்திலிருந்து கோடைக்காலத்துக்கான மாற்றம் நிகழும் மாதம் ஆகும். இதனால் ஏப்ரல், மே மாதங்களில்தான் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகரிக்கும்.
அதன்படி, கடலோர மாவட்டங்களில் 1 முதல் 2 டிகிரி வெப்பமும், உள்மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி வெப்பமும் அதிகரித்துக் காணப்படும்.
இடையிடையே வெப்பச்சலனத்தின் காரணமாக மழைக்கும் வாய்ப்புள்ளது.
கடற்காற்றின் திசை, ஈரப்பதம், தரைக்காற்று ஆகியவற்றின் அடிப்படையிலேயே வெப்பத்தின் அளவு மாறுபடும். தற்போது தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசி வருகிறது. காற்றின் திசை மாறி, வடமேற்கு திசையிலிருந்து காற்று வீசும்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, அனல் காற்று வீசும்.
பருவமழை பற்றாக்குறையால், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது என்றார்.
மழைக்கு வாய்ப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை மாலை நிலவரப்படி, 3 இடங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
புதன்கிழமை வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
வேலூர், திருப்பத்தூர், பரமத்தி - 100
சேலம் - 99, திருச்சி - 98, சென்னை - 94

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.