அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்குத் தொடர்பாக, தமிழ்நாடு மின்வாரியம், கல்வித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் போட்டித் தேர்வு நடைபெற்றது. இத் தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள், கடந்த நவம்பர் 7-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டது. இது குறித்து தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் உமா, சென்னை பெருநகர காவல்துறை சைபர் குற்றப் பிரிவில் டிசம்பர் மாதம் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், அந்த தேர்வுக்குரிய விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரித்த தில்லியைச் சேர்ந்த நிறுவனம் மற்றும் தேர்வில் முறைகேடு செய்த 156 பேர் ஆகியோர் மீது சைபர் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இம்முறைகேடு தொடர்பாக 15 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் சரணடைந்தார். இவர்களில் 7 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இரு அதிகாரிகள் கைது: இந்நிலையில், இந்த முறைகேட்டில் தரகராகச் செயல்பட்ட, நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த ல.முருகதாஸ் (50), கோயம்புத்தூர் மாவட்டம் குரும்பபாளையத்தைச் சேர்ந்த க.குணசேகரன் (47) ஆகிய இருவரையும் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.முருகதாஸ், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வருவாய் கண்காணிப்பாளராக பணிபுரிகிறார். குணசேகரன், கோவை மாவட்ட கல்வித் துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிகிறார்.
இவர்கள் இருவரும், இந்த வழக்கில் தரகராக செயல்பட்டு மாணவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இம்முறைகேடு தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தேடப்படும் நபர்: இந்த வழக்கின், மூளையாக செயல்பட்ட அம்பத்தூர் அயப்பாக்கத்தைச் சேர்ந்த நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாகப் பணிபுரியும் அந்த நபர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் கைது செய்யப்பட்டால், வழக்கில் நீடித்து வரும் மர்மங்களுக்கு விடை கிடைக்கும் எனப் போலீஸார் தெரிவித்தனர்.