ராமநாதபுரத்தில் அதிமுக பிரமுகரிடம் நூதன முறையில் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக லண்டன் மற்றும் புதுதில்லியை சேர்ந்த இரு பெண்கள் உள்பட 12 பேர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகேயுள்ள சாத்தான்குளம் கிழக்குத் தெருவில் வசிக்கும் ராஜு என்பவரின் மகன் ஆர்.பாலசங்கர்(40). அதிமுக பிரமுகரான இவர், ராமநாதபுரத்தில் இரு வர்த்தக நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், லண்டனை சேர்ந்த பெர்ணான்டஸ், ஸ்டீபன் எட்மண்ட், மற்றொரு பெண் ஜூலியானா ஆகியோர் சேர்ந்து பாலசங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களிடம் மூலிகை எண்ணெய் ஏஜென்சி எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
லண்டனில் உள்ள 3 பேரும் கூறிய தகவலின்படி, புதுதில்லியில் உள்ள மற்றொரு பெண் ஜோதி அகர்வால் என்பவர் உள்பட 12 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு 16 தவணைகளாக மொத்தம் ரூ.50 லட்சத்தை பாலசங்கர், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கி மூலமாக அனுப்பியுள்ளார்.
இத்தொகையானது கடந்த ஏப்ரல் 5 - ஆம் தேதியிலிருந்து 23 -ஆம் தேதி வரை புதுதில்லியில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் பேசியபடி மூலிகை எண்ணெய்யை அனுப்பவில்லை. அவர்களிடமிருந்து பணத்தையும் திரும்பப் பெற முடியவில்லை.
இதையடுத்து பாலசங்கர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஓம்பிரகாஷ் மீனாவிடம் புகார் செய்தார்.
அவரது புகாரின் பேரில் லண்டனைச் சேர்ந்த 3 பேர் மற்றும் புதுதில்லியை சேர்ந்த 9 பேர் உள்பட 12 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









